tamilnadu

img

சதி என்ற சொல்லுக்கு வேறு பொருளா, ஜெய் ஸ்ரீராம்....

28 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நிரபராதிகள் என்று விடுவித்து விட்டது. 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியைத் தகர்த்தது தற்செயலான ஆவேசத்தில் நிகழ்ந்த ஒன்று, முன் கூட்டியே திட்டமிட்ட செயல் அல்லஎன்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது செய்தி. எனவே, பாஜக மூத்த தலைவர்கள் எல். கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிட்டது நீதிமன்றம். ஜெய் ஸ்ரீ ராம் என்று குரல் எழுப்பி இருக்கிறார் அத்வானி.351 சாட்சிகள், 600 ஆதாரங்கள், காணொளி பதிவுகள், புகைப்படங்கள், ஒலிநாடாக்கள் எல்லாம் தாக்கல்செய்திருந்தது சிபிஐ. ஆனால், குற்றங்கள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என்கிறது தீர்ப்பு. மசூதி இடிப்பு சதியே அல்ல என்றும் சொல்லிவிட்டது. 

இடிபாட்டுக்கு மாதக் கணக்கில் பயிற்சி 
தீர்ப்பைக் கேள்வியுற்ற (முன்பே தெரிந்திராதது போல்) உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்யமேவஜெயதே என்று குரல் எழுப்பினாராம்.  வாய்மையே வெல்லும் என்று அதற்குப் பொருளாம்  அதோடு விடவில்லை யோகி, இன்னொரு குண்டைப் போட்டார்,பாபர் மசூதி இடிப்பு பற்றி சதி என்று கிளப்பி விட்டவர்கள் தேசத்தின் முன் மன்னிப்பு கேட்கவேண்டுமாம். சரிதான், பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் மகாகவி.இந்திய மக்களின் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமை, நேயம் எல்லாவற்றையும் அரக்கத்தனமாக மிதித்து நசுக்கிச் சிதைத்து உருண்டு ஓடிய தேரில் ர(த்)த யாத்திரை நடத்தியவர் எல். கே.அத்வானி. தேசத்தின் எல்லா திசைகளில் இருந்தும் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய செங்கலுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர். உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு தெருவாக ஆத்திரமூட்டும் பேச்சுகளை ஒலிபரப்ப விஷம் கக்கும் உரைகள் நிகழ்த்தியவர்கள் உமா பாரதியும், ரிதம்பராவும்.  மாதக் கணக்கில் பயிற்சி எடுக்காமல், ஐந்தாறு மணிநேரத்தில் மொத்த மசூதி கட்டிடத்தையும் தரை மட்டமாக்கி இருக்க முடியுமா, எல்லாம் எங்கள் ஆட்கள் வேலை, என்று பகிரங்கமாக நேர் காணல் கொடுத்தவர் பஜ்ரங் தள் (வானர சேனை என்று பொருள்) தலைவர் வினய் கத்தியார். உச்ச குவிமாடம் நொறுங்கித் தரையில் விழுகையில் மடிந்து போனவர்கள் யார், எங்கள் சிவ சேனா ஆட்கள், நாங்கள் தான் தகர்த்தோம், எங்களுக்குச் சேர வேண்டிய பெருமை என்று கொக்கரித்தவர்கள் சிவ சேனா தலைவர்கள். எல்லாவற்றையும் நாகபுரியில் இருந்து வழி நடத்திக் கொண்டிருந்தவர்கள் ஆர். எஸ். எஸ். அமைப்பினர்.இது எதுவுமே திட்டமிட்ட சதி அல்ல, மசூதி இடிப்புதற்செயலான ஒன்று என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

திட்டமிட்ட அராஜகமா, தன்னெழுச்சியா?
‘வெறும் அடையாளப் பூர்வ கரசேவை மட்டும் தான்நடக்கும், கட்டிடத்திற்கு எந்த அபாயமும் நிகழாது’ என்றுஉச்ச நீதிமன்றத்தின் முன் வாக்குறுதி அளித்தவர் உ.பி.மாநிலத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங். இராணுவ பாதுகாப்பு வழங்கு என்று மத்திய அரசுக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அடையாளப் பூர்வ பாதுகாப்பு தான் தரப்பட்டது என்று தி இந்து கார்ட்டூனிஸ்ட்கேஷவ், டிசம்பர் 7, 1992 அன்று சித்திரம் வரைந்திருந்தார். கட்டிட இடிப்பை வேடிக்கை பார்த்துவிட்டு,  இடித்தவர்களுக்கு  பாதுகாப்பு வழங்கிவிட்டுத் திரும்பியது இராணுவம். அத்தனை கலவரத்தைத் தூண்டுமளவு ஒரு வெறி கொண்ட பெரும்படை, தேசமெங்கிலுமிருந்து குறிப்பிட்ட நாளில் ஒரு குறுநகரத்தில் திரண்டுஅராஜக வேகத்தில் இடித்துத் தள்ளி, தங்கள் வேலையைத் தாங்களே கொண்டாடி ஊர் திரும்பியது.இது எதுவுமே திட்டமிட்ட சதி அல்ல, எல்லாமே தன்னெழுச்சியாக நடந்த ஒன்று என்கிறது சிறப்பு நீதிமன்றம்.

சோசலிச மத சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற அடையாளத்தையே அடியோடு வெறுக்கும் பாசிச கும்பல், டிசம்பர் 6, 1992 அன்று மசூதியைத் தரை மட்டமாக்கியது, இந்தியாவின் அடிப்படை கட்டுமான அரசியல் சாசனத்தையே தகர்ப்பதற்கான பெரிய ஒத்திகை தான். புதிய தாராளமய கொள்கைகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட 1991-92 காலத்தில் எழுச்சிகரமான எதிர்ப்பு இயக்கத்தை இந்திய உழைப்பாளி மக்கள்லட்சக்கணக்கில் திரண்டு எதிர்த்துப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், 1992 நவம்பர் இறுதியில் தலைநகரையே உலுக்கிய பெரும்பேரணியை உழைப்பாளிகள் நிகழ்த்திய அடுத்த சில நாட்களுக்குள், ஒட்டு மொத்த தேசத்தை மத அடிப்படையில் எதிரெதிர் துருவங்களாகப் பிரித்துப் போடும் அபாய சதித்திட்டத்தின் பகுதியாக டிசம்பர் 6 அன்று இடித்துத் தகர்க்கப்பட்டது தான் பாபர் மசூதி. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதி மன்றம்,மசூதி இடித்தஇடத்தை எடுத்து இராமர் கோயில் கட்டுமானத்திற்கே அளித்துவிட்ட  போதும் கூட,  மசூதி தகர்ப்பு ஓர் அத்துமீறல், அராஜக வெறிச்செயல் என்று பதிவு செய்திருந்தது. அந்தத் தீர்ப்பையும் ஓரங்கட்டி விட்டு இந்தத் தீர்ப்பைவழங்குகிறது லக்னோ சிறப்பு நீதி மன்றம்.

நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, 2014 முதல் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், மோசமான பொருளாதாரக் கொள்கைகள், பொய்த்துப்போன வாக்குறுதிகள், லட்சக்கணக்கில் வேலை இழப்புகள், தொலைந்து கொண்டிருக்கும் வாழ்வாதாரங்கள், பெருகிக் கொண்டிருக்கும் தற்கொலைகள், களவு போய்க்கொண்டிருக்கும் செல்வாதாரங்கள், கார்ப்பரேட் விழுங்க அள்ளி வீசப்படும் தேச சொத்துக்களான பொதுத்துறைகள், மறுமுனையில் நாசமாக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்க்கை...இவற்றின் வலி, வேதனை முணுமுணுப்புகள் கூட கேட்கக்கூடாது என்று ஊரடங்கு மட்டுமல்ல, ஊடகங்களையும் வாயடங்கி நிற்கச் செய்துவிட்ட ஆட்சியாளர்கள், தங்களது சொந்தக் கொண்டாட்டத்தின் பாதையில் மேலுமொரு தீர்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

====எஸ்.வி.வேணுகோபாலன்===